Tuesday, October 30, 2007

சூறாவளி சுற்றுப் பயணம்..கயா

எல்லாரும் சௌக்கியமா?? ரொம்ப நாள் ஆச்சு நான் என்னுடைய பயணத்தை பத்தி எழுதி... நான் எல்லாரையும் மாதிரி ஆணி கடப்பாரைன்னு எல்லாம் பொய் எல்லாம் சொல்ல மாட்டேன். எல்லாம் ஒரு சோம்பேறிதனம் தாங்க.. மன்னிச்சிகோங்க.
சரி போன பதிவுல வரானாசிக்குனு ஒரு மூணு தனி சிறப்பு இருக்குன்னு சொன்னேன் இல்லையா.. அது என்னனா அங்கே காக்கைகளே கிடையாது, மாடு முட்டாது, அப்புறம் அங்கே மணமுள்ள மலர்களே கிடையாது..

இது காசிலேர்ந்து கயா போகிற வழி...


இப்படியாக நல்லா காசிய சுத்தி பார்த்துட்டு அங்கேர்ந்து ஒரு கார்ல கயாக்கு கிளம்பினோம். காசிலேர்ந்து கயா ரோட்வழியா ஆறு மணிநேரம் ஆனது.. ஆனா டிரைவர் ஒரு எடத்துல கூட நிறுத்த மாட்டேன்னு சொல்லிட்டாரு.. அவ்வளவு நக்சல் பயம் வழி நெடுக. ஏதாவது ஹோட்ல்ல நிறுத்துங்க டீ குடிக்கனம்னு சொன்ன கூட முடியாதுன்னு சொல்லிட்டாரு. ஆத்திர அவசரத்துக்கு கூட முடியாதுன்னு சொல்லிட்டாரு.. அப்படி இப்படின்னு ஒரு வழியா ராத்திரி பத்து மணிக்கு வந்து சேர்ந்தோம் கயாக்கு... காலைல ஒரு ஏழு மணிக்கு எல்லா காரியங்களும் முடிச்சோம். எங்க கூட வந்த பெரியவங்க எல்லாம் இறந்து போனவங்களுக்கு காரியம் செய்ய போய்ட்டாங்க.

இது தான் விஷ்ணு பாதம் கோயில் ...

இது விஷ்ணு பாதம்...

இங்கே என்ன விசேஷம்னா இங்க இறந்து போனவங்களுக்கு ஒரு தரம் காரியங்கள் பண்ணிட்டா அப்புறம் வாழ்நாள் முழுக்க நம்மளால காரியம் பண்ண முடியலேனாலும் தவறு இல்ல. விஷ்ணு பாதம்னு ஒரு கோயில் இருக்கு அங்கே தான் இந்த காரியங்கள் எல்லாம் பண்றாங்க.


பால்குனி நதி ...

இந்த கோயில் பால்குனி நதிக்கரை ஓரத்துல இருக்கு. கயாசுர்னு ஒரு அசுரன் இருந்ததாகவும் அவனை விஷ்ணு தன்னுடைய காலால் மிதித்து கொன்று அவனை கல்லாக மாற்றியதாக தல புராணம். அப்படி மிதித்த போது ஏற்ப்பட்ட பாததிதின் சுவடை இந்த கோயிலில் வைத்து ஆராதனை செய்கின்றனர்.

ஆலமரம் ...

அதே போன்று மற்றொரு விசேஷமான விஷயம் இங்கே ஒரு ஆல மரம் இருக்கு அதன் மேல் பாகம் இங்கேயும் நடு பாகம் காசியிலும் வேர் பாகம் அலகாபாதிலும் இருப்பதாக கூறுகின்றனர். இந்த ஆல மரத்தை சாட்சியாக வைத்துக்கொண்டு தான் உங்களுக்கு மிகவும் பிடித்த பழம், காய்,ஸ்வீட் ஆகியவற்றை விட வேண்டும். உண்மையில் நமக்கு பிடித்துள்ள அகம்பாவம், கோவம், பொறாமை ஆகியவற்றை விட வேண்டும் கால போக்கில் அது மாறி விட்டது.

சரி கயா சுத்தி பார்த்தாச்சு.. இங்கேர்ந்து இருபத்தி ஐந்து கிலோமீட்டர் தூரத்துல தான் புத்தகயா இருக்கு இங்கே தான் புத்தர்க்கு போதி தந்த போதி மரம் எல்லாம் இருக்கு.. நேரமின்மை காரணமா நாங்க போகலை. சரி அடுத்து அலகாபாத் போக தயாரா இருங்க கூடிய விரைவில் சந்திக்கிறேன்.. :)